சக மனிதர்களிடமும், ஜீவராசிகளிடமும் கருணையுடனும் அன்புடனும் நடந்து கொள்வதன் மூலம் துன்பத்தில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியுடன் வாழலாம் என்று தரம்சாலா திபெத்திய படைப்புகள் நூலக இயக்குநர் கெஷே லத்தோர் கூறினார்.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவின் அனைவருக்கும் பொறுப்பு அறட்டளையின் சார்பில் தில்லியில் உள்ள இந்தியா ஹபிடாட் சென்டரில் "37 போதிசத்வ பயிற்சிகள்' எனும் தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவு நிகழ்ச்சி வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், கெஷே லக்தோர் ஆற்றி உரை:
உலகில் பணத்தை நிர்வகிப்பதற்காக பலரும் பல்வேறு பயிற்சிகளைப் பெறுகின்றனர். ஆனால், மனதை நிர்வகிக்க யாரும் அக்கறை காட்டுவதில்லை. மனதை செம்மையாக வைத்திருந்தால் நமது உடலும், பேச்சும் ஒழுங்காக இருக்கும். அதற்கு தியானம் அவசியமாகிறது. மேலும், நம்மை உள்நோக்கி கவனிப்பதும் அவசியமாகிறது. இந்த உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் மற்றவர்களிடம் அன்பு செலுத்தத் தயங்குவதே காரணம்.
சக மனிதர்களிடமும், ஜீவராசிகளிடமும்அன்பையும், கருணையையும் காட்டினால் மனம் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதை உணரலாம். நாம் நேர்மறையாக சிந்திக்கும் போது, நம்மிடம் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறைச் சிந்தனைகள் மேலோங்கும். வாழ்க்கை ஒரு நீரோடை போன்றது. அதை அதன் போக்கிலேயே விட வேண்டும். வாழ்க்கையின் துன்பத்திற்கு அறியாமைதான் காரணம்.
நாம் பல்வேறு விஷயங்களையும், மனிதர்களையும், பொருள்களையும் தொடர்புப்படுத்தி பார்க்கும் விதம், சிந்திப்பது ஆகியவற்றால்தான் மனம் துன்பத்தை எதிர்கொள்கிறது. நாம் சக உயிர்களிடம் அதிகமாக கருணை காட்டும் போது, நமது அறிவும் விசாலமடைகிறது. பல்வேறு விஷயங்களுக்கு நேரம் ஒதுக்கும் நாம், தியானத்திற்கும், நம்மை நாமே அறிவதற்கான பயிற்சிக்கும் நேரம் இல்லை என்று சொல்கிறோம்.
ஆன்மிகத்தில் சிறந்த நிலையை அடைய மனதைப் பக்குப்படுத்துவது அவசியமாகிறது. நமது அடுத்த பிறப்பை தற்போதை பிறப்பின் செயல்கள்தான் நிர்ணயிக்கின்றன. கவனிப்பது, சிந்திப்பது, தியானிப்பது ஆகியவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது வாழ்வின் உயர்வுக்கு உதவும்.
தியானத்தை நமது வாழ்வின் ஒரு அன்றாடக் கடைமையாகக் கொள்ள வேண்டும். வாழ்வின் சிறந்த நிலையை அடைவதற்கு 37 போதிசத்வ பயிற்சிகள் உதவும் என்றார் அவர்.