கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென சுசீந்திரத்தில் நடைபெற்ற அகஸ்தீசுவரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்துக்கு ஒன்றிய அதிமுக செயலர் எஸ்.அழகேசன் தலைமை வகித்தார். அவைத் தலைவர் பா.தம்பித்தங்கம் வரவேற்றார். துணைச் செயலர் இ.முத்துசாமி, இணைச் செயலர்கள் ஏசுத்தங்கம், பாக்கியா பாய், பொருளாளர் எம்.சக்தி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், கிழக்கு மாவட்டச் செயலர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்காக பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவிப்பது; சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட இணைச் செயலர் ஏ.ராஜன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் சுந்தர்சிங், பேரூர் செயலர்கள் பி.வின்ஸ்டன், சந்திரசேகர், தாமரை தினேஷ், ராஜபாண்டியன், ஒய்.கைலாசம், ஜான் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுசீந்திரம் பேரூர் செயலர் குமார் நன்றி கூறினார்.