மார்த்தாண்டத்தில் நகராட்சிக் கடையில் டீக்கடை நடத்தி வரும் மூதாட்டியின் கடைக்கு சீல் வைக்க வியாபாரிகள் ஆட்சேபம் தெரிவித்ததால் வெள்ளிக்கிழமை அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன். இவர், மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே குழித்துறை நகராட்சிக்குச் சொந்தமான கடையில் 1967 இல் இருந்து குத்தகை மூலம் டீ கடை நடத்தி வந்தாராம். இவர், 1992 இல் இறந்துவிட்டதால், அக் கடையை தொடர்ந்து அவரது மனைவி பாலம்மாள் (67) நடத்தி வருகிறாராம்.
இந்நிலையில் இக்கடையை காலி செய்யுமாறு கடந்த 2012 இல் குழித்துறை நகராட்சி நிர்வாகம் பாலம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாலம்மாள் குழித்துறை சார்பு நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், உரிய சட்ட வழியில் அல்லாமல் கடையை அப்புறப்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டதாம். இதனிடையே, பாலம்மாள் நடத்தி வரும் கடைக்கு சீல் வைக்க நகராட்சிப் பணியாளர்கள் டைசி, ஸ்டீபன் உள்ளிட்டோர் சென்றனர்.
கடைக்கு சீல் வைக்க அப்பகுதி வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த மார்த்தாண்டம் போலீஸார் நகராட்சிப் பணியாளர்கள், வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னைக்கு 3 நாள்களுக்குள் நகராட்சி ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்காமல் பணியாளர்கள் திரும்பிச் சென்றனர். இது தொடர்பாக திங்கள்கிழமை நகராட்சி ஆணையரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.