நாகர்கோவில் ஒழுகினசேரியில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மின் மாற்றியில் ஏறி தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியால் சனிக்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (40). மதுப்பழக்கம் கொண்ட இவர், அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவாராம். இதை அவரது மனைவி கண்டித்தாராம்.
இந்நிலையில் ஒழுகினசேரியிலுள்ள ஒரு மின்மாற்றியில் ஏறிய சுரேஷ் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியுள்ளார்.
மின்மாற்றியில் மின்சாரம் இருந்த நிலையில், மின்சார வாரியத்தினருக்கும், தீய ணைப்புத் துறையினரும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து சுரேஷிடம் பேச்சு நடத்தினார். இதில் அவர் மின்மாற்றியிலிருந்து கீழே இறங்க அடம் பிடித்த நிலையில், மின் வாரியத்தினர் மின்சாரத்தை தடை செய்து, சுரேஷை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர். தொடர்ந்து போலீஸார் அவரை எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.