நாகர்கோவிலில் நடைபெற்ற தொலைபேசி ஆலோசனைக் குழு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் பிஎஸ்என்எல் தொலைபேசி மற்றும் இணைய சேவைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தொலைபேசி ஆலோசனைக் குழுத் தலைவருமான ஏ. விஜயகுமார் தலைமை வகித்தார்.
மாவட்ட பொதுமேலாளர் ஆர். சஜிகுமார் முன்னிலை வகித்தார். துணைப் பொது மேலாளர்கள் எல். டெல்பின் மேரி, கே. ராஜன், எஸ். அனிதா மற்றும் கோட்டப் பொறியாளர், உப கோட்டப் பொறியாளர்கள், தொலைபேசி ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர் ஏ. விஜயகுமார் பேசியதாவது:
மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதற்கு அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டுமென்றும், குறிப்பாக கால் டிராப், கால் கிடைக்காமை மற்றும் மொபைல் இன்டர்நெட்டின் வேகம் குறைவு போன்றவற்றை சரி செய்ய வேண்டுமென்றும், மாவட்டத்தில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்தும் வகையில் போதிய உபகரணங்களைப் பெற்றுத் தருதல், சாலை பராமரிப்பு, முக்கிய இடங்களில் நடைபெறும் மேம்பால பணிகளால் தொலைத் தொடர்பில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கும், மேற்கொண்டு தவிர்ப்பதற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார்.