கேரளத்திலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி சுருளகோடு அருகே பழுதாகி நின்ற நிலையில் போலீஸார் அதனை பறிமுதல் செய்தனர்.
கேரளத்தில் இருந்து குமரி மாவட்டப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதிகளுக்கும் அடிக்கடி மீன் மற்றும் இறைச்சிக் கழிவுகள் லாரிகளில் ஏற்றி வந்து கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கேரளத்தில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சுருளகோடு அருகே செல்லன்திருத்தி பகுதியில் பழுதாகி நின்றது. இந்த லாரியிலிருந்து வீசிய துர்நாற்றம் காரணமாக அப்பகுதி வழியாக மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, லாரி ஓட்டுநர் லாரியை விட்டு தலைமறைவாகிவிட்டார். தகவலறிந்து வந்த குலசேகரம் போலீஸார், லாரியின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு பேசி, அவர்கள் அனுப்பிய லாரியில் மீன் கழிவுகள் ஏற்றப்பட்டு, மீண்டும் கேரளத்துக்கே கொண்டு செல்லப்பட்டது. மேலும் பழுதான லாரி பறிமுதல் செய்யப்பட்டு குலசேகரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.