ஓய்வுபெற்ற தோட்டத்தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதிமூலம் குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ. 6,500 வழங்கவேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில், வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ மாவட்ட துணைத் தலைவர் பி. நடராஜன் தலைமை வகித்தார். தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில்
வழங்கப்படும் ஓய்வூதிய தொகை குறைந்தபட்சம் ரூ. 6500 வழங்கவேண்டும். ஏற்கெனவே ஓய்வூதியத்தில் முன்பணம் வாங்கியவர்கள் அந்த தொகையை 100 மாதங்களில் தவணையாக திருப்பி செலுத்திய பிறகும், 220 மாதங்களுக்கும் மேலாக தவணையாக பிடித்தம் செய்கின்றனர். அதனை நிறுத்துவதுடன், பிடித்தம் செய்த அதிக தொகையை தொழிலாளர்களுக்கு திருப்பி வழங்கவேண்டும்.
அரசு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையாக ரூ. 1,000 அறிவித்த பிறகும், பலருக்கு இன்னும் ரூ. 200, 300 தான் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதிய தொகையை ஓய்வூதியமாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கட்டுமானத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கே. செல்லப்பன் தொடக்க உரையாற்றினார். சிஐடியூ மாவட்ட துணைச் செயலர் வல்சகுமார், மாவட்ட துணைத் தலைவர் சந்திரபோஸ் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். மாவட்டச் செயலர் கே. தங்கமோகன் நிறைவுரையாற்றினார். இதில், நிர்வாகிகள் எஸ். அந்தோணி, எம். லட்சுமணன், ஜான்செளந்தர்ராஜ் உள்பட திரளான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.