குமரி மாவட்டத்தில் உள்ள விவசாய கூட்டுறவு பொறுப்பு குழுக்கள், சுயஉதவிக் குழு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.66.30 லட்சம் கடனுதவிகள் வழங்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 65 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, கூட்டுறவு சந்தைப்படுத்துதல்,பதப்படுத்துதல் மற்றும் சேமித்தல் கருத்தரங்கம் மற்றும் பொது மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ அசோகன் தலைமை வகித்து, 16 விவசாய கூட்டுப் பொறுப்பு குழுக்களுக்கு பயிர்க் கடனாக ரூ.15.50 லட்சமும், 18 விவசாய கூட்டுபொறுப்பு குழுக்களுக்கு தொழில்கடனாக ரூ.46 லட்சமும், 2 பேருக்கு சிறுதொழில் கடனாக ரூ.70 ஆயிரமும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய கால கடனாக ரூ.1.10 லட்சமும், ஒரு மகளிர் சுய உதவிக் குழுவுக்கு கடனாக ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.66.30 லட்சம் மதிப்பில் கடனுதவிகளை வழங்கினார்.
முன்னதாக நடைபெற்ற பொது மருத்துவ முகாமில் 200 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நடுக்காட்டு ராஜா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குநருமான ஜி.சுப்பையா, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பா.சங்கரன், கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலர் எம்.முகம்மது ஷாபி , கடுக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் ஐயப்பன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், திட்டுவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது, மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையத் தலைவர் திமிர்த்தியுஸ், பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சேவியர் மனோகரன், சந்துரு, லதாராமசந்திரன், நகுலன், ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.