குமரி மாவட்டத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கணக்கு தொடங்கியுள்ளதாக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் சந்திரசேகர் தெரிவித்தார்.
அருமனை அஞ்சல் நிலையத்தில் வங்கி சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் வங்கி சேவை அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் வகையில் "பேமென்ட் பேங்க்' என்ற பெயரில் அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவையை கடந்த செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
இதை தொடர்ந்து நாடு முழுவதும் அஞ்சல் நிலையங்களில் வங்கி சேவை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
குமரி மாவட்டத்தில் ஏற்கெனவே நாகர்கோவில் தலைமை அஞ்சல் நிலையம் உள்பட 5 அஞ்சல் நிலையங்களில் பேமென்ட் பேங்குகள் செயல்படத் தொடங்கிய நிலையில், தற்போது அருமனை உள்பட தக்கலை, திருவட்டாறு, நெய்யூர், தாழக்குடி, முளகுமூடு ஆகிய 6 இடங்களில் கூடுதலாக பேமென்ட் பேங்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தச் சேவையை மக்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
குமரி மாவட்டத்தில் அஞ்சல் நிலையங்களில் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் 60 ஆயிரம் பேர் கணக்கு வைத்துள்ளனர் என்றார்.
நிகழ்ச்சியில், குழித்துறை உபகோட்ட ஆய்வாளர் கண்மணி, மாவட்ட அஞ்சல் துறை மேலாளர் நவீன், அருமனை பேரூராட்சி முன்னாள் தலைவர் சுஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அருமனை அஞ்சல் நிலைய அலுவலர் சந்திரன் வரவேற்றார். கென்னடி நன்றி கூறினார்.