கஜா புயல் எதிரொலியாக குமரி மாவட்ட கடலோர கிராமங்களை கண்காணிக்க 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கஜா புயல் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், அவர் பேசியது: புயல் எச்சரிக்கை காரணமாக குமரி மாவட்ட மீனவர்கள் வரும் 17ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரைக் கிராமங்களிலும் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இக்கிராமங்கள் 9 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் 24 மணி நேரமும் கடலோரப் பகுதியின் நிலவரம் குறித்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும். கடல்அலை சீற்றம், காற்றின் வேகம் உள்ளிட்டவை குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றார் அவர். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.