திருவட்டாறு காவல் நிலையத்தில் விசாரணை யின் போது தப்பி ஓடியவரை போலீஸார் கைது செய்தனர்.
மேக்காமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் ஜோசப் (35) பி.எஸ்.சி. நர்சிங் படித்து விட்டு கனடா நாட்டில் பணி செய்து வரும் இவர் அண்மையில் ஊருக்கு வந்திருந்தார். மேலும் இவர், திருமணமான நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறாராம். இவருக்கும், இவரது அண்டை வீட்டில் வசிக்கும் சுகின்லால் ஸ்டாலினுக்கும் (40) அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அருள்ஜோசப், சுகின்லால் ஸ்டாலினின் வீட்டுக் கண்ணாடியை சேதப்படுத்தினராம். இது குறித்து சுகின்லால் ஸ்டாலின் திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, போலீஸார் அருள் ஜோசப்பை திருவட்டாறு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் போலீஸாரின் பிடியிலிருந்து தப்பி திருவட்டாறு கேசவபுரம் சாலையில் ஓடினாராம். இதையடுத்து போலீஸார் அவரைப் துரத்திப் பிடித்து, வழக்குப் பதிந்து கைது செய்தனர்.