குமரி மாவட்டத்தில் பணி ஓய்வு பெறும் காவல் அலுவலர்களுக்கு தாமதமின்றி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, குமரி மாவட்ட ஓய்வு பெற்ற காவல் அலுவலர்கள் நல சங்கத் தலைவர் பென்சிகர், செயலர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேவிடம் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
குமரி மாவட்டத்தில் ஓய்வு பெறும் காவல் அலுவலர்களுக்கு ஓய்வு பெற்ற 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது உணவு விநியோக அட்டை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். உயர்நீதிமன்ற வழக்கு தொடர்பாக அந்தந்த வழக்குகளில் புலனாய்வு காவல் அதிகாரிகளை அனுப்பி குற்ற வழக்கு நடவடிக்கைகளை சிறப்புடன் செயல்படுத்த வேண்டும். குமரி மாவட்டத்தில் காலியாக உள்ள காவல் நிலையங்களில் ஆய்வாளர்களை உடனடியாக பணியமர்த்த வேண்டும்.
ஓய்வு பெற்ற காவல் அலுவலர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்படும் ரூ. 350 ஐ தள்ளுபடி செய்வது அல்லது விலக்களித்து முழு மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும். சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு முழு அந்தஸ்துடன் பணியாற்றிடவும், உத்தரவாதம் கிடைத்திடவும் வழிவகை செய்ய வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.