கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு நியாயமான இழப்பீட்டை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றார் கனிமொழி.
நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கஜா புயலால் அதிக அளவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்னை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் சேதமடைந்துள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மாநிலத்துக்கான நியாயமான இழப்பீட்டை அரசு போராடி பெற வேண்டும்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்றுள்ளார். அதன்பின்னர், அவரின் அறிவுறுத்தலின் பேரில், எம்.பி. என்ற முறையில், நாடாளுமன்றத்தில் தமிழகத்துக்கான நியாயமான இழப்பீட்டுத் தொகையை பெற திமுக சார்பில் குரல் எழுப்புவேன். கன்னியாகுமரி தொகுதியைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்துக்கான நியாயமான இழப்பீட்டை பெற்றுத் தர முயற்சிக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக தலைமையில் பலமான கூட்டணி அமையும்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. ஆனால், இதை காவல்துறையும், தமிழக அரசும் மூடி மறைக்கின்றனர் என்றார் அவர்.