கருங்கல் சந்தை திடலில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக மகளிரணி செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது: மத்திய பாஜக அரசு இளைளைஞர்களுக்கு இதுவரை எந்த வேலைவாய்ப்பையும் உருவாக்கவில்லை. நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைக் கூறி ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக அரசை அகற்ற வேண்டும்.
தமிழக ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறையில்லாமல் பதவியை காப்பதிலேயே குறியாக இருக்கின்றனர். தமிழகத்தில் வேண்டாம் என்று எதிர்க்கும் திட்டங்களை திணிக்கின்றனர். தமிழினம் உயர வேண்டும் என்பதற்காக சொத்தில் பெண்களுக்கு சம உரிமை திட்டம், பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த சுயஉதவிக் குழுக்கள் திட்டம், பெண்கள் கல்வி பயிலவேண்டும் என்பதற்காக திருமண நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களைக் கொண்டு வந்தவர் கருணாநிதி என்றார் அவர்.
இந்தக் கூட்டத்திற்கு குமரி மேற்கு மாவட்டச் செயலர் மனோ தங்கராஜ் எம்எல்ஏ தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ததேயூ பிரேம்குமார், கிள்ளியூர் ஒன்றியச் செயலர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பெர்னார்டு, புஷ்பலீலா ஆல்பன் ஆகியோர் பேசினர்.
மரிய சிசுகுமார், ஜான் கிறிஸ்டோபர், தாமஸ், காதர், ஜெயசந்திரன், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.