சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன் தெற்கு எழுத்தாளர் இயக்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் திருத்தமிழ் தேவனார் தலைமை வகித்தார். சபரிமலையில் சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும். ஆண், பெண் பாலின சமத்துவத்தை நிலைநிறுத்த வேண்டும். சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் பச்சைத் தமிழகம் தலைவர் சுப. உதயகுமாரன், குமரி பெண்கள் போராட்டக்குழு நிர்வாகி சவுமினி, பெண்கள் இணைப்பு குழுவைச் சேர்ந்த சுதா, செல்லத்தங்கம், சமூக ஆர்வலர் ஜெரால்டு, மற்றும் முத்துகுமார், நிலவுரிமை கூட்டமைப்பைச் சேர்ந்த போஸ், விவசாயிகள் தொழிலாளர்கள் நல சங்கத் தலைவர் ரவி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.