கன்னியாகுமரி மாவட்டத்தில் இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செவ்வாய்க்கிழமை (அக்.23) தொடங்குகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்புரை நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் வேகமாக முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. அதிநவீன முறையிலான மற்றும் பழைய முறையை விட மிகவும் மேம்படுத்தப்பட்ட "கண் லென்ஸ்' பொருத்தும் சிகிச்சை முறை கண்புரை நோயாளிகளுக்கு செய்யப்பட்டு வருகிறது. இம்முறையில் கண்புரை நோயாளிகளின் கண்களில் உள்ள பழுதுபட்ட லென்ஸ்களுக்கு பதிலாக புதிய லென்ஸ் மிகவும் எளிதான முறையில் பொருத்தப்படுவதால் கண்புரை நோயாளிகளுக்கு, பார்வை மிக தெளிவாகவும், நேர்த்தியாகவும்
கிடைக்கிறது. புதிய லென்ஸ் பொருத்தப்படுவதால் மிக நீண்ட நாள்கள் பார்வை தெளிவாக இருக்கிறது, மிக கனமான கண்ணாடி அணிய தேவையில்லை, லென்ஸ் பொருத்தப்பட்ட 7 நாள்களில் இயல்பான பணிகளை செய்ய முடியும்.
இந்த அதிநவீன கண் லென்ஸ் பொருத்தும் முகாம், அக். 23 ஆம் தேதி தக்கலை ஊராட்சி ஒன்றியம் பள்ளியாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், அக். 24 ஆம் தேதி திருவட்டாறு ஊராட்சி ஒன்றியம் குலசேககரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 25 ஆம் தேதி தோவாளை ஒன்றியம் தடிக்காரன்கோணம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 27 ஆம் தேதி ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சிங்களேயர்புரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், 29 ஆம் தேதி குருந்தன்கோடு ஒன்றியம் நடுவூர்கரை ஆரம்ப சுகாதாரநிலையத்திலும், 30 ஆம் தேதி கிள்ளியூர் ஒன்றியம் கீழ்குளம் சுகாதார நிலையத்திலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
இதில் அனைத்து கண்புரை நோயாளிகளுக்கும் இலவசமாக கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதற்கு அடுத்த நாளே தங்கள் இல்லங்களுக்கு அரசு வாகனத்திலேயே கொண்டு விடப்படுவர். எனவே, கண்புரை நோயாளிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, இந்த நவீன கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையை மேற்கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.