திக்குறிச்சி தாமிரவருணி ஆற்றில் நடைபெற்று வரும் மஹா புஷ்கரம் விழாவில் புதன்கிழமை மேஷம் ராசிக்காரர்கள் திரளானோர் கலந்து கொண்டு, சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
விழாவின் 6 ஆவது நாளான புதன்கிழமை மேஷம் ராசிக்காரர்களுக்கு சிறப்பானதாக கருதப்படுகிறது. இதையடுத்து இந்த ராசியை சேர்ந்தவர்கள் அதிகாலையில் வந்து தாமிரவருணி ஆற்றில் நீராடி, திக்குறிச்சி மகாதேவரை வணங்கி சென்றதை காண முடிந்தது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் சத்ரு சம்ஹார ஹோமம், ருத்ர ஹோமம் உள்ளிட்டவை நடைபெற்றன. இந்த ஹோமங்கள் பிற்பகல் 2 மணி வரை நீடித்தது. தொடர்ந்து தாமிரவருணியில் புனித நீர் தெளித்து சிறப்பு பூஜைகளும் மேற்கொள்ளப்பட்டன. மாலையில் சிறப்பு பூஜைகள் வேத பாராயணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தாமிரவருணி நதிக்கு ஆரத்தி காட்டப்பட்டது.
இவ் விழாவில் குமரி மாவட்டத்திலிருந்தும், கேரளத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வியாழக்கிழமை முதல் 4 நாள்கள் அரசு விடுமுறை என்பதால் வரும் நாள்களில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 ஆம் நாள் விழாவான வியாழக்கிழமை காலையில் தட்சிணாமூர்த்தி ஹோமம், ருத்ரஹோமம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.