பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு, நாகர்கோவிலில் அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலைக்கு, அதிமுக சார்பில், தமிழக அரசின் புதுதில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரம், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஏ. அசோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன்உசேன், மாவட்ட அவைத் தலைவர் சேவியர்மனோகரன், சந்துரு, சுகுமாரன், கார்மல்நகர் தனீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திராவிடர் கழகம் சார்பில், மாவட்டத் தலைவர் மணி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில், மண்டலச் செயலாளர் வெற்றிவேந்தன், மாவட்டச் செயலாளர் கிருஷ்ணேஸ்வரி, பொதுக்குழு உறுப்பினர் தயாளன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.