தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவிலில் சனிக்கிழமை (செப். 22) நடைபெறவுள்ளது. இதில், 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன என்றார் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதியும், அதிமுக அமைப்புச் செயலருமான தளவாய் சுந்தரம்.
இது குறித்து நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியது:
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (செப். 22) மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, எம்ஜிஆர் உருவப்படத்தை திறந்து வைத்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குகிறார். மேலும், குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட அதிமுகவின் சார்பில் 20 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி விழாப் பேருரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிக்கிறார். இதில், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவுக்கு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. குமரிக்கு வருகைதரும் முதல்வருக்கு அஞ்சுகிராமத்தில் மாவட்ட அதிமுக செயலர்கள் எஸ்.ஏ. அசோகன் (குமரி கிழக்கு), ஜான்தங்கம் (குமரி மேற்கு) ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்றார் அவர்.