தமிழகத்தில் தற்போது மின்பற்றாக்குறை உள்ளது என்றார் மத்திய நிதி- கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
குமரி மாவட்டம், குலசேகரன்புதூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயர் கோபுர மின்விளக்கு திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மத்திய அரசின் நிதி வருவதில் சிக்கல் நீடித்து வந்தது. எனினும், உள்ளாட்சி பணிகளுக்காக ரூ.1,400 கோடி தமிழகத்துக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெரீனா கடற்கரையில், கருணாநிதிக்கு இடம் வழங்கியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதை ஏற்கமுடியாது. எந்த அமைச்சரும் இதுபோன்ற வார்த்தைகள் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தற்போது மின்பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில், உடன்குடி அனல்மின் நிலையத் திட்டத்துக்காக நிலக்கரி கொண்டு வர, கடலில் இறங்குதளம் அமைப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும், எதிர்ப்பது சரியல்ல. மின்சாரம் தேவையெனில் அதற்கு நிலக்கரி வந்தாக வேண்டும். தமிழகம் தன்னிறைவு பெற்ற மாநிலமாகத் திகழ வேண்டும் என்றார் அவர்.