சென்னையில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாகர்கோவிலில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மரிய ஸ்டீபன் தலைமை வகித்தார்.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநர் கதிரை தாக்கிய பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் பொருள்களை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலர் பொன்.சோபனராஜ், சிஐடியூ மாவட்டச் செயலர் கே.தங்கமோகன், நகைத்தொழிலாளர் பாதுகாப்பு பேரவை தலைவர் ஜி.செலஸ்டின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அகமது உசேன், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.அந்தோணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.செல்லசுவாமி நிறைவுரையாற்றினார்.
இதில், ஆட்டோ ஓட்டுநர் சங்கப் பொருளாளர் மோகன், நிர்வாகிகள் கண்ணன், சொர்ணப்பன், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.