ராஜாக்கமங்கலம் ஒன்றியம், சம்பக்குளம் கால்வாயை தூர்வாரி, பாசனத்துக்கு தண்ணீர் வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் ஆர்.ரவி தலைமையில் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் சம்பக்குளம் நீராதாரத்திலிருந்து தொடங்கும் சம்பக்குளம் கால்வாய், தர்மபுரம், மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், புத்தளம், மணக்குடி ஊராட்சிகள் வரை சுமார் 15 கி.மீ.தொலைவு செல்லும் பிரதான கால்வாயாகும். இந்தக் கால்வாய் பாசனத்தால் நெல், தென்னை, மா, பலா, வாழை உள்ளிட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தற்போது சம்பக்குளம் கால்வாயில் பெரும்பாலான பகுதி மணல் நிறைந்து, செடிகள் வளர்ந்து பயன்பாட்டுக்கு தகுதியாக இல்லாத நிலையில் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, இந்தக் கால்வாயை தூர்வாரி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனு அளிக்கும்போது, துணைத் தலைவர் என்.முருகேசன், மாவட்ட நிர்வாகிகள் சைமன் சைலஸ், ஆறுமுகம் பிள்ளை, ராஜாக்கமங்கலம் ஒன்றியச் செயலர் எஸ்.கே.பிரசாத், சிவகோபன் ஆகியோர்
உடனிருந்தனர்.