குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கனமழை பெய்து ஓய்ந்த நிலையில், வெப்பச்சலனம் காரணமாக கடந்த இரண்டு நாள்களாக மிதமான சாரல் மழை பெய்து வருகிறது.
வியாழக்கிழமை களியல், திற்பரப்பு, அருமனை, குலசேகரம், சுருளகோடு, திருவட்டாறு, சித்திரங்கோடு உள்பட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக சாரல் மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில், தெருக்களில் தண்ணீர் மிதமான அளவில் பாய்ந்தோடியது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவு: அதே வேளையில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இதர பகுதிகளில் பெய்ததை விட மழை மிகக்குறைவாகவே பெய்தது. மழையின் காரணமாக கரையோரப் பகுதிகளில் தண்ணீர் கிடைக்காமல் வாடி நின்ற மரவள்ளி, தென்னை, வாழை உள்ளிட்டப் பயிர்கள் ஓரளவுக்கு தப்பியுள்ளன. மேலும் மிதமான சாரல் மழையானதால் ரப்பர் பால்வடிப்பிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை.