குறும்பனை முதல் நீரோடிவரை உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் அலை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என கிள்ளியூர் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மீனவர்களின் குடியிருப்புகளுக்குள் கடல் நீர் புகுந்து வீடுகள், உடைமைகள் சேதமடைகின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விகுறியாக உள்ளது.
குறிப்பாக, தேங்காய்ப்பட்டினம், அரையன்தோப்பு, முள்ளூர்துறை கடலோரகிராமங்களில் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் ஏற்கெனவே அமைக்கப்பட்ட கடல் அலை தடுப்புச்சுவர் சேதமடைந்து கடல் நீர் சாலையில் சென்று சாலை துண்டிக்கப்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மேலும், குறும்பனை முதல் நீரோடிவரை சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை கிராமங்களில் கடல் அலை தடுப்புச்சுவர் அமைத்தால் அப்பகுதி மக்களுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.எனவே, அரசு உடனடியாக இப்பகுதிகளை ஆய்வு மேற்கொண்டு கடல் அலை தடுப்புச் சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.