நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் மூன்றுசக்கர மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை , பொதுமக்களை குறிப்பாக வாகனங்கள் வைத்துள்ள மக்களை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. இதில் குறிப்பாக மூன்று சக்கர மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தும், மாற்றுத் திறனாளிகள் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பெரும்பாலான மாற்றுத் திறனாளிகள் குறைந்த வருவாயில் வாழ்க்கையை நடத்தும் நிலையில், பெட்ரோல் விலை உயர்வு இவர்களின் வருவாயில் பெரும் பகுதியை காலி செய்து விடுகிறது. இந்நிலையில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்றுசக்கர வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாற்றுத் திறனாளிகளான குலசேகரம் ஓமனாபுரத்தைச் சேர்ந்த வர்க்கீஸ் மற்றும் வில்லுக்குறியைச் சேர்ந்த ஜெகன்ராஜ் ஆகியோர் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மூன்றுசக்கர மோட்டார் சைக்கிள்கள் பெட்ரோலுக்கு குறைந்த தொலைவு மட்டுமே ஓடக்கூடியவை. மாற்றுத் திறனாளிகள் குறைந்த வருவாயில் அல்லது வருவாய் இல்லாமல் வாழ்க்கை நடத்தும் நிலையில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல் விலை மாற்றுத் திறனாளிகளுக்கு பெரும் பொருளாதார சுமையை அளித்து வருகிறது.
எனவே மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்களுக்கு மாதம் குறிப்பிட்ட அளவு பெட்ரோலை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும் என்றனர்.