குமாரகோவில், வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் பௌர்ணமியை முன்னிட்டு வேல்முருகன் சேவா சங்க பக்தர்கள் திங்கள்கிழமை கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் தொடங்குவதற்கு முன் முருகனின் திருவுருவப் படத்துக்கு பூஜை செய்து, முருகனின் திருநாமத்தை கூறியவாறு கோயில் அமைந்திருந்த மலையை சுற்றி வலம் வந்தனர். முன்னதாக சன்னதியின் முன்பகுதியிலுள்ள கணபதியை வணங்கிவிட்டு, வழியில் சுடலைமாடன் சுவாமி, மலையிலுள்ள கோம்பைசாமி, பத்ரகாளியம்மனை வழிபட்டு நிறைவாக தேரடி கோயில் வழியாக தெப்பகுளத்திலுள்ள கணபதியையும் வணங்கிவிட்டு கோயிலை வந்தடைந்தனர்.
கோயிலில் அருள்மிகு குமார சுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கிரிவலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், வேல்முருகன் சேவா சங்கத் தலைவர் டாக்டர் சுகுமாரன், பொதுச்செயலர் அஜிகுமார், சங்க நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், கங்காதரன், ரத்தினசுவாமி, பாபு, அழகப்பாபிள்ளை, மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தோட்டியோடு ஸ்ரீ மௌனகுரு சுவாமி கோயிலில் பௌர்ணமி பூஜை விழாவை முன்னிட்டு, காலை 9 மணிக்கு அருள்பெருஞ்சோதி அகவல் பாராயணம், 10 மணிக்கு அபிஷேகம், தொடர்ந்து பஜனை ,சொற்பொழிவு, கோ மாதா பூஜை, சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 6 மணிக்கு சிவபுராணம் வாசித்தல், திருவிளக்கு வழிபாடு, சொற்பொழிவு, நாமஜெபம், தியானம் ஆகியவற்றை தொடர்ந்து அலங்கார பூஜை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் சுகதேவன் செய்திருந்தார்.