கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் அஞ்சல் ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, கோட்டத் தலைவர் பி.ராமன் திருப்பாப்பு தலைமை வகித்தார். முன்னாள் கோட்டச் செயலர் தங்கப்பன் தொடக்கவுரையாற்றினார்.
கோட்டத் தலைவர் வர்கீஸ், செயலர் எம்.செந்தில், கோட்டச் செயலர் பிரசாந்த், கோட்ட பொருளாளர் ஜான்கென்னடி, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கச் செயலர் ராஜநாயகம், தொலைத்தொடர்பு ஓய்வூதியர் சங்கச் செயலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
கிராம அஞ்சல் ஊழியர்களுக்கான கமலேஷ் சந்திரா குழுவின் அறிக்கையை முழுமையாக மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்; அஞ்சல் ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.