கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தடிக்காரன்கோணத்தில் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டம் நடைபெற்றது.
தோவாளை வட்டாரச் செயலர் எஸ்.மிக்கேல், குலசேகரம் வட்டாரச் செயலர் விஸ்வம்பரன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலர் ஆர். செல்லசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.முருகேசன், மலைவிளை பாசி, என்.உஷா பாசி, எஸ்.சி.ஸ்டாலின் தாஸ், குலசேகரம் வட்டாரச் செயலர் பி.விஸ்வம்பரன், செயலர் எம்.வல்சகுமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பழுதடைந்து காணப்படும் தடிக்காரன்கோணம்-குலசேகரம் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்; தனியார் வனப் பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; குமரி மாவட்ட வனப்பகுதிகளை களக்காடு, முண்டன்துறை புலிகள் சரணாலயப் பகுதிளுடன் இணைக்கக் கூடாது; வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கீரிப்பாறை தொழிலாளர் குடியிருப்புக்கு செல்லும் பாலத்தை புதிதாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதில், நிர்வாகிகள் பி. நடராஜன், எஸ்.மணி, எச்.ஐயப்பன், பி.பேதுரு, கே.மாதவன் குட்டி, ராஜன், வி.ஜெயச்சந்திரன், டி.ஜெயராஜ், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.