பத்மநாபபுரம் தொகுதிக்குள்பட்ட 270 வாக்குச் சாவடிகளிலும் வியாழக்கிழமை அமைதியான முறையில் வாக்குப் பதிவு நடைபெற்றது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பத்மநாபபுரம் பேரவைத் தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக சுமார் 30 நிமிடங்கள் தாமதமாகவே வாக்குப் பதிவு தொடங்கியது. சில இடங்களில் மாற்று இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாக்குப் பதிவு நடைபெற்றது.
தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் எம்.எல்.ஏ.வும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவருமான பி.முகம்மது இஸ்மாயில் தனது குடும்பத்தினருடன் வந்து வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தார்.