குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையிலும், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுவதால் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.
குமரி மாவட்டத்தில் தற்போது கடும் வெயில் நிலவி வருகிறது. பகல் வேளைகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் வெளியில் இயல்பாக நடமாட முடியாத அளவுக்கு உள்ளது. காடுகளிலுள்ள மரங்களில் இலையுதிர்வுக்குப் பின்னர் புதிய இலைகள் துளிர்த்து பசுமையாக காட்சியளிக்கும் போதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.
இந்நிலையில் திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தில் தற்போது குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் இல்லாத நிலையில் பல்வேறு பகுதிகளிலுள்ள சுற்றுலாப் பயணிகளும் திற்பரப்பு அருவிக்கு படையெடுக்கின்றனர். விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து சென்றனர்.