தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடைவிதிக்கப்பட்டதை போல் மதுவுக்கும் தடை விதிக்க வேண்டும் என்றார் மருத்துவர் கு.சிவராமன்.
கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து, மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் நாகர்கோவில் மகாராஜா ஸ்ரீஅவிட்டம் திருநாள் நினைவு மாநகராட்சி காப்பக மைதானத்தில் புத்தகத் திருவிழா நடத்தி வருகிறது.
2 ஆம் நாளான சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆறாம்திணை மருத்துவர் கு.சிவராமன் கலந்துகொண்டு பேசியது: தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டதை போல் மதுவையும் தடைசெய்ய வேண்டும்.
ஒரு காலத்தில் மதுக்கடை இருக்கும் சாலையில் நடந்து செல்வதைக் கூட தவறாக கருதினர். ஆனால் இப்போது அப்படி இல்லை. புதிது, புதிதாக தொற்று நோய்கள் நம்மை உலுக்கி வருகின்றன. நாம் நம் சுற்றுச்சூழலை பாதுகாத்தாலே பாதி நோய்களை விரட்டி விடலாம். உணவு, பழக்க வழக்கம், வாழ்வியல் அனைத்துமே நீரிழிவு நோய்க்கு காரணமாக விளங்குகின்றன. பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகமாகி வருகிறது. தேநீருக்கு பதிலாக கரிசலாங்கண்ணி குடிநீர் அருந்தலாம். உணவுப்பழக்கம் நன்றாக இருந்தால் ஆரோக்கியம் தானாக வரும் என்றார் அவர்.
முன்னதாக, போட்டி தேர்வுகளில் பங்குபெறுவது குறித்த கருத்தரங்கில், போட்டித் தேர்வுக்கு தயாராகும், விருப்பமுள்ள மாணவர், மாணவிகளின் சந்தேகங்களுக்கான பதில்களும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, சார்-ஆட்சியர் (பத்மநாபபுரம்) சரண்யாஅரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மா.சுகன்யா, உதவி ஆட்சியர் (நாகர்கோவில்) பிரதிக் தயாள், உதவிக் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தெற்கு ரயில்வே செயற்பொறியாளர் எம்.எழிலன், முன்னோடி வங்கி மேலாளர் பி.ராம்குமார் ஆகியோர் மாணவர், மாணவிகளுடன் கலந்துரையாடினர்.