தேசிய அளவிலான தடகளப் போட்டியில் நித்திரவிளை அருகேயுள்ள வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
திருச்சியில் அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான 16 வயதுக்குள்பட்டோருக்கான தடகளப் போட்டியில், இப்பள்ளி மாணவி லிபோனா ரூசலின் ஜின் 1,000 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், மாணவர் சுஜித் 600 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும் பெற்று தங்கப் பதக்கங்களை பெற்றனர்.
இதையடுத்து புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், மாணவி லிபோனா ரூசலின் ஜின் 1,000 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றார்.
கடந்த வாரம் சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற 18 வயதுக்குள்பட்டவர்களுக்கான 1,500 மீட்டர் தடகளப் போட்டியில் இப்பள்ளி மாணவர் ஷெஜின் முதலிடமும், மாணவர் ராகுல் நீளம் தாண்டுதல் போட்டியில் மூன்றாமிடமும் பிடித்தனர். இம்மாணவர்கள் இம்மாதம் 19, 20, 21ஆம் தேதிகளில் உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
குடியரசு தின விழாப் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர் அபிஷ், தேசியப் போட்டியில் பங்குபெற தகுதி பெற்றுள்ளார். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை குழித்துறை மறைமாவட்ட கத்தோலிக்க பள்ளிகளின் கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ ஜஸ்டஸ், தாளாளர் மரிய ராஜேந்திரன், தலைமையாசிரியர் ராபர்ட் பெல்லார்மின், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் சந்திரன் உள்ளிட்டோர் பாராட்டினர்.