கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூலாக ரூ.12 லட்சத்து 64 ஆயிரத்து 210 கிடைத்துள்ளது.
இக்கோயிலில் வைக்கப்பட்டுள்ள காணிக்கை உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படும். இம்மாதம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தேவசம் போர்டு இணை ஆணையர் ம.அன்புமணி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மொத்தமுள்ள 17 உண்டியல்களில் இரண்டு உண்டியல்கள் மட்டுமே திறந்து எண்ணப்பட்டன. நாகர்கோவில் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் ரத்னவேல்பாண்டியன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், பகவதியம்மன் கோயில் மேலாளர் ஆறுமுகநயினார், கணக்கர் ஸ்ரீராமசந்திரன் ஆகியோர் முன்னிலையில், கோயில் ஊழியர்கள், செவ்வாடை பக்தர்கள், கல்லூரி மாணவர், மாணவிகள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், ரூ. 12 லட்சத்து 64 ஆயிரத்து 210 ரொக்கமும், 13.700 கிராம் தங்கம், 103 கிராம் வெள்ளி மற்றும் மலேசியா ரிங்கிட், தென்னாப்ரிக்கா ரேன்ட், இங்கிலாந்து பவுண்ட் ஆகியனவும் வசூலாக கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.