குழந்தைகள் செல்லிடப்பேசியை அதிகம் பயன்படுத்துவதால் அவர்களது கற்பனைத் திறன், நினைவாற்றல் குறையும் என்றார் எழுத்தாளர் நாறும்பூநாதன்.
நாகர்கோவிலில் கல்வி நிறுவனங்கள் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் நடைபெற்று வரும் 3ஆவது கன்னியாகுமரி புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்டு குழந்தை இலக்கியம் என்ற தலைப்பில் அவர் பேசியது: குழந்தை இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், எழுத்துகள் மிகவும் குறைந்த அளவிலேயே வெளி வருகின்றன. எழுத்தாளர்களும், கதைசொல்லிகளும் குறைந்து விட்டனர். உலகளவில் குழந்தைகளுக்கான நூலகம் அமெரிக்காவில் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் உள்ளஅண்ணா நினைவு நூலகத்தில் குழந்தைகளுக்கான நூல்கள் உள்ளன.
குழந்தைகள் அறிதிறன் செல்லிடப்பேசிகளில் மூழ்குவதால் அவர்களது கற்பனைத்திறன் குறைகிறது. நினைவாற்றல் குறைகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுக்கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் அவர்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை கூடுதல் செயலர் எஸ்.நாகராஜன், தேசிய சுகாதார இயக்கத் திட்ட இயக்குநர் தரேஷ் அகமது, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே ஆகியோர் பேசினர். முன்னதாக, கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலம் குறித்த கையேடு வெளியிடப்பட்டது. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ரேவதி, சார்-ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர், உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரதிக் தயாள், நகராட்சி ஆணையர் சரவணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) குழந்தைசாமி நன்றி கூறினார்.