பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் 3 ஆவது நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது. மேலும், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் பிஎஸ்என்எல் தொலைபேசி நிலையம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, ஏயூஏபி தலைவர் லட்சுமண பெருமாள் தலைமை வகித்தார். ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜார்ஜ், மாவட்டச் செயலர் பி.ராஜூ, மாநில உதவிச் செயலர் பி.இந்திரா, அகில இந்திய பொருளாளர் ராஜன், தொலைத்தொடர்புத் துறை ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எ.செல்வம், நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் பேசினர். இந்தப் போராட்டதில் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.