மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை விடியோவில் பதிவு செய்யும் பணிக்கு விடியோகிராபர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
குமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் தேர்தல் பணிகளை நேரடியாக விடியோ பதிவு செய்வதற்கு முத்திரையிடப்பட்ட ஒப்பந்த விலைப்புள்ளிகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஒப்பந்த விலைப்புள்ளிகள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக இம்மாதம் 25 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக தேர்தல் பிரிவில் ஒப்படைக்கப்படவேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் அதிகாரிகளுடன் இருந்து நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்தல், தேர்தல் நடத்தைவிதி அமலில் இருக்கும்போது நிகழும் சம்பவங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் அறைகள் கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மேலும், விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.