அகஸ்தீசுவரத்தில் பிரதமர் மோடி அடுத்த மார்ச் 1 ஆம் தேதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப் பணியினை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள பாஜக தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். இத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணனே மீண்டும் போட்டியிடுவார் என்று தெரிகிறது. தமிழகத்தில் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி மார்ச் 1 ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறார். இதற்காக அகஸ்தீசுவரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் பிரதமர் மோடி பங்கேற்பதற்கான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் முன்பு மத்திய அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நிறைவடைந்த அரசுத் திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவும் நடைபெறுகிறது. இதற்காக கல்லூரி வளாகத்தில் தனித்தனியாக 2 மேடைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள் குறித்து மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கல்லூரி வளாகத்துக்கு சென்று மேடை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, அவர் பொதுமக்கள் மைதானத்துக்கு வந்து செல்லும் பாதைகள் குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.