கருங்கல் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் பசுமை மராத்தான் ஓட்டப்பந்தயம் சனிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி புரவலர் ஆயர் மார் ஜார்ஜ் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தாளாளர் ஆன்றனிஜோஸ் வரவேற்றார். தேசிய விளையாட்டு வீரர் பிரிட்டோஜாய், மனோதங்கராஜ் எம்எல்ஏ, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீனவர் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சர்ச்சில் ஆகியோர் பசுமை ஓட்ட வீரர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினர். எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஸ்குமார் ஆகியோர் கொடியசைத்து ஓட்டப்பந்தயத்தை தொடங்கி வைத்தனர்.
கையில் மரக்கன்றுகளையும், மலர்ச்செடிகளையும் கையில் ஏந்திய மாணவர்கள் திரளாக போட்டியில் கலந்து கொண்டனர். மரம் வளர்ப்போம், மழை பெறுவோம், பசுமை காத்து வளம் பேணுவோம் போன்ற வாசகங்கள் அடங்கிய விளம்பர பதாகைககளை மாணவர்கள் கையில் ஏந்தியவாறு சென்றனர்.
கல்லூரியில் இருந்து தொடங்கிய இந்த மராத்தான் ஓட்டம், வெள்ளியாவிளை, பாலப்பள்ளம், ரீத்தாபுரம், குளச்சல், வாணியக்குடி, குறும்பனை, ஆலஞ்சி, மிடலாக்காடு, வழியாக 15 கி.மீ. தொலைவு சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தனர். மாணவர், மாணவிகள் தாங்கள் சென்ற இடங்களில் பொதுமக்களிடம் மரக்கன்றுகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் இசையாஸ் செய்திருந்தார்.