நாகர்கோவிலில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிக்கிய பேரூராட்சிகள் உதவிச் செயற்பொறியாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவிச் செயற்பொறியாளராகப் பணியாற்றியவர் மாடசாமி சுந்தர்ராஜ் (50). அண்மையில், நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்துக்கு வந்த இவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். இதில், மாடசாமி சுந்தர்ராஜ் வந்த காரில் இருந்த கணக்கில் வராத ரூ. 4.9 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள அவரது வீடு மற்றும் வங்கி லாக்கர்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடந்தினர். அப்போது, வீட்டில் இருந்து 150 பவுன், வங்கி லாக்கரில் இருந்து 162 பவுன் என மொத்தம் 312 பவுன் தங்க நகைகளையும், சுமார் ரூ. 7.50 லட்சம் ரொக்கத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். அதோடு, அவரது மனைவி பெயரில் உள்ள வங்கி லாக்கரின் சாவி தொலைந்துபோனதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த லாக்கருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
மாடசாமி சுந்தர்ராஜுக்கு மொத்தம் 13 வங்கிக் கணக்குகள் உள்ளன என்றும், சுமார் ரூ. 2 கோடி வரை வெளிநபர்களுக்கு கடன் கொடுத்திருப்பதும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய டைரியில் இருந்து தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மாடசாமி சுந்தர்ராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது (சிஆர்பிசி 102) மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ், போலீஸார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை விரைவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதால், மாடசாமி சுந்தர்ராஜ் விரைவில் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இதேபோல, அவர் மீது துறை ரீதியாக இன்னும் ஓரிரு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.