குமரி மாவட்டத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதியுடன் இ.எஸ். ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும் என ஏஐடியூசி தொழிற்சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
புதுக்கடையில் நடைபெற்ற தமிழ்நாடு ஏஐடியூசி தொழிற்சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் கிளை மாநாட்டுக்கு அதன் தலைவர் இசக்கிமுத்து தலைமை வகித்தார். மாநாட்டை, அமைப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் தொடங்கி வைத்தார். அமைப்பின் மாநில செயலர் எஸ். காசிவிஸ்வநாதன் பங்கேற்றுப் பேசினார்.
மாநாட்டில், அமைப்பின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்டத் தலைவராக துரைராஜ், துணைத்தலைவர்களாக ராஜன், இசக்கிமுத்து , பொருளாளராக அனில்குமார், பொதுச்செயலராக ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தீர்மானங்கள்: கட்டுமானம் மற்றும் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கு பிற மாநிலங்களில் வழங்குவதுபோன்று, மாதம் ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; தமிழகத்தில் தற்போது வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையினை அரசு தாமதமின்றி முறையாக வழங்க வேண்டும்; அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவினை அரசு ஏற்க வேண்டும்; முந்திரி பருப்பு தொழிலாளர்களுக்கு கேரளத்தில் வழங்குவதுபோன்று ஊதியம், போனஸ், அகவிலைப்படி போன்றவை வழங்க வேண்டும்; தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் படுக்கை வசதியுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க வேண்டும்; குமரி மாவட்டத்தில் உடனடியாக ரப்பர் பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.