நாகர்கோவில் நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு நீதிமன்ற உத்தரவின்பேரில் சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
நாகர்கோவிலில் நீதிமன்றச் சாலை, கே. பி. சாலை, பாலமோர் சாலை உள்பட பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி
அதிகரித்துள்ளது. நெருக்கடி மிகுந்த முக்கிய பகுதிகளில் விதிமுறைகளை கடைப்பிடிக்காமலும், உரிய அனுமதி இல்லாமலும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனிடையே, நகராட்சிப் பகுதிகளில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து நகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பல கோடி மதிப்பில் கட்டுப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்கள் குறித்து நகராட்சி அதிகாரிகள், உள்ளூர் திட்ட குழும அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, நீதிமன்றச் சாலையிலுள்ள சூப்பர் மார்க்கெட், கே. பி. சாலையில் உள்ள ரத்த பரிசோதனை நிலையம், வணிக வளாகம் ஆகிய கட்டடங்களுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.