குடியரசு தினத்தன்று (ஜன. 26) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பு: குடியரசு தினமான ஜன.26ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்குள்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் முற்பகல் 11 மணியளவில் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இம்மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் ஜன. 26ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அடுத்து வரும் நிதி ஆண்டிற்கான திட்ட அறிக்கையை முன் வைத்து ஒப்புதல் பெறுதல் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன. மேலும், அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். எனவே, தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் நியமனம் செய்யும் பற்றாளர்கள் பங்கேற்று நடத்தவுள்ள இக்கூட்டத்தில் கிராம ஊராட்சிப் பகுதிகளுக்குள்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.