களியக்காவிளை, மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தடம்மாறி இயக்கப்பட்ட 3 சிற்றுந்துகள் உள்பட விதிமுறை மீறி இயங்கிய 10 வாகனங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
குமரி மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்களை தடுக்கும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் வட்டார போக்குவரத்து அலுவலர், மார்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளர் ஜாண் விக்டர், வட்டாட்சியர் சுரேஷ்குமார் மற்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கொண்ட 4 குழுக்கள் அமைக்கப்பட்டு வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தலைமையிலான அதிகாரிகள் களியக்காவிளை, மார்த்தாண்டம், கண்ணுமாமூடு, கொல்லங்கோடு, நித்திரவிளை மேல்புறம், அருமனை, புதுக்கடை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மேற்கொண்ட வாகனச் சோதனையில் வழித்தடம் மாறி இயக்கப்பட்ட 3 சிற்றுந்துகள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போன்று அரசுப் பேருந்துகளுக்கு இணையாக, வருவாய் இழப்பீடு ஏற்படும் வகையில் இயக்கப்பட்ட கேரள பதிவெண் கொண்ட 3 வேன்களும், தமிழக பதிவெண் கொண்ட 4 தனியார் வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட சிற்றுந்துகள் உள்பட 10 வாகனங்களும் கோழிப்போர்விளையில் உள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
வாகனச் சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், விதிமுறையை மீறி இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலர் க. பழனிச்சாமி தெரிவித்தார்.