நாகர்கோவில் அருகே கிணற்றை தூர்வாரும் போது, பெண்ணின் எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
குமரி மாவட்டம், பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான இவருக்கு, எஸ்.எஸ். நகர் பகுதியில் தோப்பு உள்ளது. இதில் புதிதாக வீடு கட்டும் பணியை அவர் தொடங்கினார். இதையடுத்து தோப்பில் 25 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றை தூர்வாரும் பணியை தொடங்கினார். அப்போது கிணற்றில் இருந்து மனித எலும்பு துண்டுகள் கிடைத்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள், இரணியல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், எலும்பு துண்டுகளை கைப்பற்றி விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக் கூடு ஒரு பெண்ணினுடையது என்பது தெரியவந்தது. எலும்புகளுடன் தங்க கொலுசு, ஆபரணங்களும் கிடைத்துள்ளதால், கிணற்றில் பெண் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.