களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது.
இப்பகுதியில் பகலில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் மழைக்கான அறிகுறி தென்பட்டது. பின்னர், மாலையில் பரவலாக மழை பெய்யத் தொடங்கிது. தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மேல் அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டியது; பலத்த காற்றும் வீசியது. இதன் காரணமாக களியக்காவிளை, குழித்துறை பகுதிகளில் மின்விநியோகம் தடைபட்டது. சுமார் அரை மணி நேரத்துக்குப் பின்னர் மின்விநியோகம் சீரானது. களியக்காவிளை சுற்றுவட்டாரத்தில் படந்தாலுமூடு, திருத்துவபுரம், மடிச்சல், ஈத்தவிளை, குழித்துறை பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கருங்கல் பகுதியில்... கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதல் சாரல் மழை பெய்தது. கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளான பள்ளியாடி, நட்டாலம், முள்ளங்கனாவிளை, கிள்ளியூர், தொலையாவட்டம், கருமாவிளை, மிடாலம், மிடாலக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளையில் அதிகபட்சமாக 8 மி.மி. மழை பதிவாகியிருந்தது.