மார்த்தாண்டம் மீன்சந்தையிலிருந்து வெளியேறும் கழிவுநீர், நல்லூர் குளத்தில் உள்ள குடிநீர் ஆதார கிணற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்த்தாண்டம் நகர வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்க நிர்வாகிகள் வியாழக்கிழமை குழித்துறை நகராட்சி ஆணையரிடம் அளித்த மனு: மார்த்தாண்டம் லாரி பேட்டையில் மீன் கொண்டுவரும் வாகனங்கள் நிறுத்தவும், அப்பகுதியில் மீன் பாரங்களை இறக்குவதற்கும் வசதியாக குழித்துறை நகராட்சி சார்பில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதி வடிகால் ஓடை வழியாக பாய்ந்து, நல்லூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நல்லூர் குளத்தில் உள்ள குடிநீர் ஆதார கிணறுகளில் சென்று கலக்கிறது.
இதனால் இப்பேரூராட்சி பகுதியில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், மார்த்தாண்டம் சந்தை பகுதியிலிருந்து நல்லூர் குளம் செல்லும் பாதையில் சாலையோரம் கழிவுநீர் தேங்கி பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன.
எனவே, நகராட்சி நிர்வாகம் மார்த்தாண்டம் மீன்சந்தையில் கழிவுநீர் தொட்டி அமைத்து கழிவுநீரை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், நகர வர்த்தகர் சங்க மார்த்தாண்டம் கிளைத் தலைவர் ஆர்.டி. தினகர், செயலர் எஸ். ராஜ் பினோ, பொருளாளர் டி. ஜெயசிங், அமைப்பின் மாநில துணைத் தலைவர் கருங்கல் ஆர். ஜார்ஜ், குழித்துறை நகர திமுக செயலர் பொன். ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.