ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்ற குமரி மாவட்ட கல்லூரி மாணவிக்கு, பளுதூக்கும் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தைச் சேர்ந்தவர் மாணவி ஆரோக்கிய ஆலிஸ் ( 20). இவர், குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டரங்க விடுதியில் தங்கி நாகர்கோவிலில் உள்ள ஹோலிகிராஸ் கல்லூரியில் பயின்று வருகிறார். மேலும், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கில் பளுதூக்கும் பயிற்சி பெற்று வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பயிற்சி பெற்று வந்த அவர், கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஜூனியர் காமன்வெல்த் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்டு 76 கிலோ பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து, பதக்கத்துடன் நாகர்கோவிலுக்கு வந்த அவருக்கு, அறிஞர் அண்ணா விளையாட்டரங்க நலச் சங்கம், பளுதூக்கும் சங்கத்தினர் வரவேற்பு அளித்தனர்.