கன்னியாகுமரி மாவட்டம், அழகியமண்டபத்தில் திமுக தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவருக்கு காயம் ஏற்பட்டது.
மக்களவைத் தேர்தல் தொடர்பாக கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, கட்சியின் மேற்கு மாவட்ட செயலரும், பத்மநாபபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான மனோதங்கராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், முன்னாள் பேரவை உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், அவரது மகனும் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளருமான பிஸ்வஜித் ஆல்பன், நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இக்குழுவில் பிஸ்வஜித் ஆல்பனை சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிஸ்வஜித் ஆல்பன், மாவட்டச் செயலரிடம் முறையிட்டாராம். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த மோதலில் காயமடைந்த பிஸ்வஜித் ஆல்பன், குலசேகரம் அரசு மருத்துவமனையிலும், மாவட்டச் செயலரின் உதவியாளர் ஜெரோம் சுவாமியார் மடத்திலுள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.