கன்னியாகுமரியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என குமரி மக்களவைத் தொகுதி அமமுக வேட்பாளர் லட்சுமணன் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக லட்சுமணன் போட்டியிடுகிறார். சனிக்கிழமை நாகர்கோவில் வந்த அவருக்கு அமமுக கட்சியினர் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்று அளித்தனர்.
இதில், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான பச்சைமால், கன்னியாகுமரி மேற்கு மாவட்டச் செயலர் ஜெங்கின்ஸ், முன்னாள் பேரவை உறுப்பினர் நாஞ்சில் முருகேசன், நகரச் செயலர் அட்சயாகண்ணன், மாவட்டப் பொருளாளர் கமலேஷ், நிர்வாகி சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது, லட்சுமணன் செய்தியாளர்களிடம் கூறியது: கன்னியாகுமரி மாவட்டக் கடற்கரை 68 கி.மீ. தொலைவு கொண்டது. இம்மாவட்டத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. அமமுக வெற்றி பெற்ற 3 மாதங்களில் முதல் கோரிக்கையாக குமரியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க முயற்சி எடுப்பேன்.
கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றம் செய்ய தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள், மீனவர்களை பாதிக்கும் துறைமுகத் திட்டத்தை அமமுக எதிர்க்கும்.
மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக செயல்படுவோம். கல்வியில் சிறந்து விளங்கும் இம்மாவட்டத்தில் தொழில்நுட்பப் பூங்கா இல்லை. இங்கு தொழில்நுட்பப் பூங்கா அமைக்க பாடுபடுவேன் என்றார் அவர்.