திருநெல்வேலி

காலாவதியான நிலவேம்பு கஷாய பொடி விற்பனை!

ஏ.வி. பெருமாள்

திருநெல்வேலி மாவட்டத்தில் சில கடைகளில் காலாவதியான நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு, பன்றிக் காய்ச்சல், மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. சுகாதாரத் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், காய்ச்சலைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, நிலவேம்புக் குடிநீரை அருந்துமாறு மாவட்ட நிர்வாகமும், மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து அரசு நிறுவன (டாம்ப்கால்) நிலவேம்புக் குடிநீர்தான் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள "டாம்ப்கால்' மருந்தகத்திலும் நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட் கிடைக்கிறது. வேகமாக பரவி வரும் காய்ச்சல் காரணமாக "டாம்ப்கால்' மருந்தகத்தில் நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட் வந்திறங்கியவுடன் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. இதனால் மக்கள் நாட்டு மருந்துக் கடைகளில் நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட்டை வாங்குகிறார்கள். ஆனால், அவர்களில் பலருக்கு அந்த பாக்கெட்டில் உள்ள கஷாய பொடி காலாவதியானதா என்பதைக் கண்டறியும் விழிப்புணர்வு இல்லை. இதைப் பயன்படுத்தி நாட்டு மருந்துக் கடைக்காரர்கள் சிலர் காலாவதியான நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட்டை விற்பனை செய்து வருகிறார்கள்.
நடவடிக்கை தேவை: இதுதொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த இசக்கி என்பவர் கூறுகையில், "பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் உள்ள நாட்டு மருந்துக் கடையில்தான் நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட் வாங்கினேன். வீட்டிற்கு வந்து பார்த்தபோதுதான் அது காலாவதியானது என்பது தெரியவந்தது. அதில் 6 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த உகந்தது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு கொடுக்கப்பட்ட நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட் ஓராண்டுக்கு முந்தையது. எனவே, இதுதொடர்பாக மருத்துவத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
காலாவதியான கஷாய பொடியைப் பயன்படுத்துவதால் எந்தப் பலனும் கிடைக்காது. சில நேரங்களில் அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படக்கூடும் என சித்த மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதுதொடர்பாக இந்திய மருத்துவத் துறை மருந்தாய்வு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
நிலவேம்புக் குடிநீர் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய சித்த வைத்திய மருந்து ஆகும். இதில் 9 வகையான மூலப்பொருள்கள் உள்ளன. இதை எல்லாவிதமான காய்ச்சலுக்கும் பயன்படுத்தலாம். அரசு சித்த மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஊரக சித்த மருந்தகங்களில் நிலவேம்புக் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அனைத்து மருத்துவமனைகளிலும் போதுமான அளவு நிலவேம்புக் குடிநீர் இருப்பு உள்ளது.
எப்படி வாங்குவது? நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கும்போது நிலவேம்புக் குடிநீர் சூரணத்தை மட்டுமே வாங்க வேண்டும். அதில் ஒன்பதுவிதமான மருந்துப் பொருள்கள் உள்ளதா எனப் பார்க்க வேண்டும். சூரணமாக இல்லாமல் வெறும் குடிநீராக இருந்தால், அதில் ஒரு மருந்து மட்டுமே இருக்கும். அதை வாங்கக் கூடாது.
இதேபோல் நிலவேம்பு கஷாய பொடியை வாங்கும்போது அதன் பாக்கெட்டில் நிலவேம்பு கஷாய பொடி தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதி தேதி, இந்திய மருத்துவத் துறை மருந்து ஆய்வாளரிடம் பெற்ற உரிமம்,  தரமான தயாரிப்புதானா என்பதை உறுதி செய்யக்கூடிய ஜிஎம்பி சான்றிதழ் ஆகியவற்றின் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். 
கர்ப்பிணி பெண்கள், 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றே நிலவேம்புக் குடிநீரை கொடுக்க வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்கள், தரமற்ற மற்றும் காலாவதியான நிலவேம்பு கஷாய பொடி விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
புகார் தெரிவிக்க... திருநெல்வேலி மாவட்டத்தில் தரமற்ற மற்றும் காலாவதியான நிலவேம்பு கஷாய பொடி பாக்கெட் விற்பனை செய்யப்பட்டால், அதுகுறித்து இந்திய மருத்துவத் துறையின் திருநெல்வேலி மாவட்ட மருந்து ஆய்வாளருக்கு 77080 68801 என்ற செல்லிடப்பேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.


கடைகளில் வாங்கும்போது கவனம் அவசியம்: நிலவேம்புக் குடிநீரை எத்தனை நாள் பருக வேண்டும்?
டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களை தடுப்பதற்காக வருமுன் காப்போம் என்ற அடிப்படையிலேயே நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதை எத்தனை நாள்கள் அருந்த வேண்டும் என்பது பொதுமக்களுக்கு இதுவரை தெளிவாக தெரியவில்லை.
இதுதொடர்பாக அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: பொதுவாகவே நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறபோதுதான் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகிறோம். நிலவேம்புக் குடிநீரை அருந்துவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால் காய்ச்சல் உள்ளிட்டவற்றின் பாதிப்புகளில் இருந்து நாம் பாதுகாக்கப்படுகிறோம். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிலவேம்புக் குடிநீரை கொடுக்கலாம்.
நிலவேம்புக் குடிநீரை நாள் ஒன்றுக்கு இரு வேளை வீதம், 5 நாள்கள் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, அனைவரும் கட்டாயம் 5 நாள்கள் நிலவேம்புக் குடிநீரை அருந்த வேண்டும். இதேபோல் நிலவேம்புக் குடிநீரை காய்ச்சிய 3 மணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். அப்படி குடித்தால் மட்டுமே முழு பலன் கிடைக்கும். காய்ச்சி வைத்துவிட்டு பின்னர் சுடவைத்து குடித்தால் எதிர்பார்த்த அளவுக்கு பலனளிக்காது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT